Tuesday, December 8, 2009

காலமற்றிருத்தல்

ஒவ்வொரு நாளும்
உதிக்கும் சூரியன்
காலத்தை
ஞாபகப்படுத்துகிறதா
இல்லை
நியாயப்படுதுகிறதா?

,..

Monday, November 16, 2009

இப்படியும் ...

ராத்திரியில் ஊளையிடும்
அடுத்த தெரு நாய்
யாருடைய மரண செய்தியையோ
அறிவிப்பதாய் சொன்னாள் அம்மா .

அடுத்த நாள் காலையில்
அதே நாய்
நடுரோட்டில் அடிபட்டு
செத்துக்கிடந்ததை பற்றி
அவளிடமெதுவும் சொல்லவில்லை நான்.

.,

Tuesday, October 20, 2009

இருத்தல் - சில குறிப்புகள்

அன்பு பாசம்
காதல் நேசம்
என
அத்தனை பேரிட்டு
அழைத்த பின்பும்
ஒருவர் மற்றவருடனான
உறவுகளில்
அனைவரது பயமும்
அவரவர்களை குறித்தானதாகவே
இருக்கிறது...

Saturday, October 10, 2009

அடுத்த கதை

முழுக்கதையையும் கேளாமல்
நீயாய் எடுத்த
முடிவுகளுக்குப் பின்னால்
அலைந்து திரிகின்றன
என் அத்தனை கதைகளும்...

.,

Monday, October 5, 2009

கதை சொல்லல்

ஆளுக்கொரு கதை சொல்லி
அதை உண்மைக்கு அருகில்
நிறுத்தப் பார்க்கிறோம்.

உண்மையோ
ஏதொன்றிலும் நிலைபெறாமல்
அலைந்து திரிகிறது.

நிற்க வைத்த கதைகள்
நின்றபடி இருக்க
ஒருபொழுது மறுபொழுதாகையில்
ஒரு வாழ்க்கை தூரம்
தள்ளி நிற்கும் உண்மை.

நாம் சொன்ன கதைகளைப்
பிறர் நம்புவதைக் காட்டி
நம்மையும்
நம்பச்சொல்வார்கள் இனி.

கதைகளின் வாசனை
நிரம்பி நிற்கும் வெளியில்
உண்மையைப் பற்றிக் கவலைப்பட்டு
என்ன ஆகப்போகிறது.

Thursday, October 1, 2009

முதல் மழை இரவு

கட்டங்கள் உருள
பகடைகளில் நகர்ந்து
ஏணியில் இறங்கி
பின்
பாம்பின் வால் வழி ஏறி
அதன் வாயடைந்து நிற்கையில்
பார்க்க நேரிட்டது
விஷம் தொக்கி நிற்கும்
பல்லொன்று.
இனி பரமபதம் அடைவதை
தள்ளி வைத்து
என்ன ஆகப்போகிறது.

.,

Wednesday, September 30, 2009

கடல் சேர்தல்

ஒற்றை மழைக்கெல்லாம்
நிறைந்தொழுகும்
நதியல்ல என்னுடையது.
பருவம் தவறிப் பெய்த மழையில்
பின்னெப்படி
கடல் வந்தடைந்தேன்
என்பது மட்டும் புரியவில்லை.

மின்னிப்போனாய்

கனவுகள் வேய்ந்த கூரைக்குக் கீழ்
அமர்ந்திருந்தார்கள் அனைவரும்.
உள்நுழைந்த நிலவொளியில்
உனதிருப்பை உணர முடிந்தது.
முதலில் பெய்த மழையைக் குறித்து
பேச ஆரம்பித்த போது
நீ எழுந்து போனாய்.
வானத்தை இரண்டாய்ப் பிளந்தபடி
கடந்து சென்றது ஒரு மின்னல்.
அதைத் தொடர்ந்து வராத
இடியைக் குறித்து
எவரும் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை.

.,

Saturday, September 26, 2009

பெய்யா எழுத்து

பார்வைக்கு அருகில் பெய்யும் மழை
குடை பிடிக்க முயலும் இமைகள்
இடப்புறம் நடக்கும் நீ
வலப்புறம் திரும்பிப் பார்க்கிறாய்
சரி விடு
நனைந்தே கழியட்டும் பொழுது

Friday, September 25, 2009

பிழை திருத்தம்

தேவதைகளுக்கும் உனக்கும்
வெகு தூரம்தான்
நிலவொளியில் நீ நில்லாதவரை

Sunday, September 20, 2009

பூனைக்கதை...

நடுரோட்டில்
அடிபட்டுச்சாகும் பூனைகளுக்கு
எலிவேட்டை
தெரிந்திருந்தால் என்ன
தெரியாவிட்டால்தான் என்ன?

Wednesday, September 9, 2009

பிரிவு சேரல்

விலகிப்போகும் நிர்ப்பந்தத்தனிமையும்
பழகியிரா மௌனமும்
பரிசளிக்கப்படுகிறது உனக்கு.
இனி நீ எங்கு வேண்டுமெனினும்
சென்று கொள்ளலாம்.
போவதற்கு முன்
உன் ஒரு புன்னகையை மட்டும்
தந்து செல்.
பின்னொரு நாள்
அதைப்பற்றி
நான் கரைசேரக்கூடும்.