Sunday, November 30, 2008

...

காலமற்றிருந்த நதியோடி
உருண்டிருந்த வாழ்வில் தொடங்கி
துப்பாக்கி தூக்கியலையும்
முரட்டுக்காலணி மனிதர்கள் வரை
கூழாங்கற்கள்
பார்த்திருந்தது ஏராளம்.

மோதி வீழ்ந்து
விறைத்திருந்த முனைகள் ஒடிந்து
மென்மை பழகி
இசைவயப்பட்ட
அவற்றின் ஒற்றைப்பாடம்
எவருக்கும் புரியாமல் போவதையும்
இனி
பார்த்திருக்கக்கூடும்.

...

மறுகரையில் இருப்பதாகச்சொல்லி
செய்தியனுப்புகிறாய்.

நம்மிடையே நதியோடியிருந்த
காலம் போய்
வெகுநாட்களாகிவிட்டது.

இப்போது நான் வந்து நிற்கும்
கடலுக்கு
எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள்
என்று
யாருக்குத்தெரியும்?

Saturday, November 29, 2008

...

அழகிய கைகளின் சித்திரப்பாவைதான் ... 
ஆனாலும் என்ன? 
ஆட்டுவித்தால் 
ஆடித்தான் ஆக வேண்டியிருக்கிறது ...

...

செவிகளை என் பக்கம் சாய்த்து,
கண் மூடி அமர்கிறாய்,
வார்த்தைகளற்றுப் போகிறது எனக்கு ...

Friday, November 28, 2008

...

நாம் அமர்ந்து பேசிய
இடங்கள் அனைத்தும்
இப்போது 
சக்கரங்களால் இயங்குகின்றன.
அவரவர் பாதை
அவரவர்க்கென்றோம்.
எந்தப் பாதையில்
எங்கிருக்கிறாய் நீ?
முடிவுகளற்று நீள்கிறது
பயணம்...

Monday, November 24, 2008

...

எதன் முழுமை
எதிலென்றறியாமல் 
வெவ்வேறாய் பிரிந்திருக்கிறோம்.
சேர்ந்திருத்தல் இனி
எளிதாக்கப்படினும்,
முழுமையடைதல் கடினம்.

...

சிலரை நினைவுபடுத்தும் 
வேறு சிலர்
எல்லா கூட்டத்திலும்
இருந்து தொலைப்பார்கள்.

...

ஏழு மரம் 
ஏழு நதி தாண்டி
உனையடைந்து நிற்கிறது 
என் பயணம். 
நதியின் மாற்றமும்
மரத்தின் நிலைத்தலும்
வசப்படட்டுமினி.
முரண்பட்டிருத்தல்
முறையாகும் தளத்தில்,
இடம் பொருள் காலத்தில்
நம்பிக்கையற்றிருத்தல் நலம்.

...

எழுதப்படாத கவிதையின்
முதல் வரி போல் அமர்ந்திருக்கிறாய். 
முதல் பார்வையில்
தொடங்கிய பயணம்
முற்றுப்பெறாமல் நீள்கிறது.  
எங்கெங்கோ அலைந்து
வருமிக்காற்று, 
உறைந்து நிற்கிறது
நம்மிடையே.
உருப்பெற்று முழுமை பெறட்டும் 
உன் புன்னகை. 
சேருமிடம் பற்றிய கவலையற்று
சிதறிக்கிடக்கிறதென்
காலம்.

...

இலையுதிர் காலமும்
கனவுதிர் காலமும் கடந்து
பனியுதிர் காலத்தில்
நிற்கிறதென் படகு ...

Saturday, November 15, 2008

...

அழகிய மழையொன்றை
தொலைத்துவிட்டுக்
காத்திருக்கிறதென் வானம்

Wednesday, November 12, 2008

...

நிறைந்தும் வழிந்தும்
கரைகள் கவிந்தும்
கடலாகின்றன நதிகள் ...

அடுத்த மழையும் பெய்தாகிவிட்டது ...

Monday, October 27, 2008

...

ஒலிக்கத்துவங்கியதுன்
அருகாமையின் பாடல்.
எந்தத்தளத்தில்
இருக்கிறேன் என்றறிந்தும்
எதிர்காலத்துக்குள்
தூக்கி எறியப்படுகிறேன்.
தற்போது வேறேப்போதோ
ஆகும் தருணத்தில்
பாடல் முடிந்தும் போகலாம்.
கேட்டிருத்தல் சாபம்...


Thursday, September 18, 2008

...

உள்நிறையும் வார்த்தைகளில்
ஒளிந்திருக்கிறது உன் புன்னகை.
கைவல்யக்கனவுகளின்
நிறம் மங்கும் பொழுதினில்
நீயிருப்பதை
நினைவு கொள்கிறேன்.
உனைப்பிரிந்த வார்த்தைகளுக்குள்
முடங்கிக் கிடக்கிறதென் காலம்.
காலமற்றிருப்பதன் சுகவாழ்வு
இன்னமும் வசப்படவில்லை.
உனது மொழி திறப்பதற்கானவென்
காத்திருப்பு
காலத்திற்குள் நிகழ்கிறதா
அல்லது வெளியிலா
எனக் கவலைப்படுகிறாய்.
நீ தெளிவுறுவதற்கான மொழியை
இப்பொழுதுதான்
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
பின்
மொழியறிந்து
மொழிதிறக்கும் முதற்கணத்திலேயே
கற்றுக்கொள்வோம்
மொழியின் அமைதியையும் ...



Monday, September 15, 2008

...

சரக்கு ரயிலில்
அடிபட்டுச்செத்த பூனைக்கு
முகமற்ற மரணம் ...

...

வாகன நெரிசலின்
பதட்டம் ரசித்தபடி
வரிசையாய் அமர்ந்திருக்கின்றன
சிவப்பு விளக்கின் மேல்
வெள்ளை புறாக்கள் ...

...

எனது அதி உயரத்தின்
விளிம்புகளில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
தடுப்புச்சுவராய் இருபுறமும்
எழுந்து நிற்கின்றன
சில வார்த்தைகள்.
ஆழத்திலிருந்து
அழைக்கிறதோர் புன்னகை.
நமது உயரங்களும்
நமது ஆழங்களும்
நமதாக மட்டுமே
இருக்கும் பட்சத்தில்
சமநிலையிலும்
நிகழலாம் மரணம் ...

...

காக்கப்பட்டதென் நிர்வாணம்
அறிந்த நிர்வாணத்திலும்
ஆச்சரியங்களேதுமில்லை ...

இருவர்க்கும் பொதுவாயிருந்த
கடைசியிழையும்
அறுபட்டுப்போனபின்
எந்தப்பட்டம்
எந்தத்திசையில்
பறந்தாலென்ன -
அடிக்கின்ற காற்று
அடித்துக்கொண்டேதான் இருக்கும் ...

Saturday, September 6, 2008

...

'உனைப்போலத்தான் நானும்'
என்பதை
உயர்வு நவிற்சி கலந்து
சொல்லிப்போகிறாய்

போலவும் உயர்ந்தும்
ஒரே நேரத்தில் இருப்பது
உனக்கு மட்டும்தான்
சாத்தியப்படும் போலிருக்கிறது...