Wednesday, July 24, 2013

மழைவோம் ...

மழை நனைக்கும் பாதை 
மனம் நிறைக்கும் நனைதல்
நனைதலின் பொருட்டு வாழ்வு


,..

மழைப்பயணம்

வரிகள் 
வரியலைகள்
மலைநிரைகளில்
மழை நிறைக்கும்
பார்வைக்கதைகள்.


அருகிருந்து
வானம் பார்த்திருப்பாய்
நீ.

கீழிறங்கும்
மேகம் பார்த்திருப்பேன்
நான்.

நிறைந்தும் வழிந்தும்
நகரும் வாழ்வு.
,..

Tuesday, July 9, 2013

மழை(யின்) வார்த்தை...

சலசலக்கும் காற்று அப்போதும் வீசிக்கொண்டிருந்தது.

அது காதலின் பாடல்
எதையும் கொண்டிருக்கவில்லை,
ஆயினும் நமது உரையாடலில்
அழகிய வார்த்தைகள்
நிறைந்திருந்தன.

நமது வெளியில் நிரம்பிய
அழகிய விஷயங்கள் குறித்து
நாம் பேசிக்கொண்டோம்.

ஏதொரு வெள்ளை மேகத்தின் கீழும்
ஒளிந்து கொள்ளும் சூரியனைப் பற்றி,
காலையில் துவங்கி
நேரத்தை
இரவு வரை இழுத்துச்செல்லும்
மாட்டுவண்டியைப் பற்றி,
பரந்த கடலையும்
நம்மை மறு கரைக்கு கூட்டிச்சென்ற
படகையும்
வரைந்த சிறுவனைப் பற்றி,
இன்னும் ஏதேதோ.

நாம் நமது தேநீர் கோப்பையிலிருந்து
மௌனத்தை அருந்தத் துவங்கிய போது
பாரம் நிறைந்த மேகங்களால்
வானம் இருண்டது.

இருப்பு சார்ந்த உணர்ச்சிகளை துறந்து
அம்மாவின் மடியில் ஆச்சர்யத்துடன் அமர்ந்திருக்கும்
ஒரு சிறு குழந்தையாய்
உன்னைப் பார்த்திருந்தேன்.

அப்போதுதான் நீ
'மழை பொழியட்டும்' என்றாய் ...
மழை பொழிந்தது.

,..