Wednesday, September 30, 2009

கடல் சேர்தல்

ஒற்றை மழைக்கெல்லாம்
நிறைந்தொழுகும்
நதியல்ல என்னுடையது.
பருவம் தவறிப் பெய்த மழையில்
பின்னெப்படி
கடல் வந்தடைந்தேன்
என்பது மட்டும் புரியவில்லை.

மின்னிப்போனாய்

கனவுகள் வேய்ந்த கூரைக்குக் கீழ்
அமர்ந்திருந்தார்கள் அனைவரும்.
உள்நுழைந்த நிலவொளியில்
உனதிருப்பை உணர முடிந்தது.
முதலில் பெய்த மழையைக் குறித்து
பேச ஆரம்பித்த போது
நீ எழுந்து போனாய்.
வானத்தை இரண்டாய்ப் பிளந்தபடி
கடந்து சென்றது ஒரு மின்னல்.
அதைத் தொடர்ந்து வராத
இடியைக் குறித்து
எவரும் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை.

.,

Saturday, September 26, 2009

பெய்யா எழுத்து

பார்வைக்கு அருகில் பெய்யும் மழை
குடை பிடிக்க முயலும் இமைகள்
இடப்புறம் நடக்கும் நீ
வலப்புறம் திரும்பிப் பார்க்கிறாய்
சரி விடு
நனைந்தே கழியட்டும் பொழுது

Friday, September 25, 2009

பிழை திருத்தம்

தேவதைகளுக்கும் உனக்கும்
வெகு தூரம்தான்
நிலவொளியில் நீ நில்லாதவரை

Sunday, September 20, 2009

பூனைக்கதை...

நடுரோட்டில்
அடிபட்டுச்சாகும் பூனைகளுக்கு
எலிவேட்டை
தெரிந்திருந்தால் என்ன
தெரியாவிட்டால்தான் என்ன?

Wednesday, September 9, 2009

பிரிவு சேரல்

விலகிப்போகும் நிர்ப்பந்தத்தனிமையும்
பழகியிரா மௌனமும்
பரிசளிக்கப்படுகிறது உனக்கு.
இனி நீ எங்கு வேண்டுமெனினும்
சென்று கொள்ளலாம்.
போவதற்கு முன்
உன் ஒரு புன்னகையை மட்டும்
தந்து செல்.
பின்னொரு நாள்
அதைப்பற்றி
நான் கரைசேரக்கூடும்.