Tuesday, May 21, 2013

நிலவு-மரம் ...

மழை நின்ற இரவின் 
தெளிந்த வானம்.
மேகங்களில் இருந்து
வெளிவந்த நிலவை
மறைத்து நிற்கிறது
முன் நிற்கும் மரம்.
இலைகளினூடே தெரியும்
நிலவைப்பார்த்து
மரத்தில் முளைத்ததா
நிலவென்கிறாய்.
பின்,
அமைதியாய்ப் புன்னகைக்கும்
என் கைகளைப் பற்றிக்கொண்டு

'இல்லை, நிலவில் முளைத்திருக்கிறது மரம்'
என்றபடி
நீயும் புன்னகைக்கிறாய்.
என் வெளியெங்கும்
நிறைகிறது
நிலவு-மரம்.

,..

Saturday, May 18, 2013

மீண்டும் . . .

மழையாடிய பாதை
நடந்து நடந்து தேயும் மனம் 
எஞ்சி நிற்கும் ஈரம் 

,..

Thursday, May 16, 2013

. . .


உள்ளுறையும் ஒரு அழகிய பாடல் நீ.
உனை
வெளிக்கொணரும் முயற்சியில்
இசையாகும் பயணம்
நான்.
,..


Wednesday, May 8, 2013

நிலை மயக்கம்

நிலா தெரியாத இரவில் 
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.
பின்
நிலவு தெரிந்த பொழுதில், 
எண்ணி முடித்த 
நட்சத்திரங்களைப் பறித்து
நமது தோட்டத்தில் 
நட்டு வைத்தோம்.
விரிந்து நிற்கும் 
நட்சத்திரங்களின் வாசத்தில் 
மயங்கி நின்றது 
நிலவும்.

,.. 

Tuesday, May 7, 2013

விருப்பங்களின் சிறகுகள் ...


இரவின் வானில் 
உனை விட்டுப்பறந்த 
விருப்பத்தின் சிறகுகள் 
அதிகாலைக் கிளையில் 
எனை வந்தடைந்து 
சொல்லத்துவங்கின 
நிறைவேறியும் நிறைவேறாத 
விருப்பங்கள் குறித்து.

,..

Wednesday, May 1, 2013

:-)

புன்னகையின் மொழியை
கற்றுத்தருவதாய் சொல்லி 
கவிதைகள் வாங்கிக்கொண்டாய்.
பின் 
எனது பாடங்கள் குறித்து 
கேட்ட போதெல்லாம் 
புன்னகைக்க மட்டுமே செய்தாய்.

,..