Sunday, March 2, 2014

ஒரு சொல் ஒரு கடல்

வீசும் காற்றில்
அசையும் வார்த்தைகளை
ஒவ்வொன்றாய்ப் பறித்து
கடலுள் எறிகிறேன்.

உள்வாங்கும் அலைகளில்
மிதந்து மறையும் சொற்கள்
தூரத்துப் படகுகளில்
வெளிச்சமாய் உதித்தெழும்.

மறையும் சூரியனை
சென்றடையும் சொல் மட்டும்
அந்திக்கடலுள் கரைந்து போகும்.

மயங்கும் வெளிச்சத்தில்
நிரம்பித்தளும்பும் கடல்
ஒரு சிறு கவிதையை
முன்வைக்கும்.

ஒவ்வொரு நட்சத்திரமாய்
விழித்தெழுந்து
பின்னதை வாசிக்கத்துவங்கும்
பிரபஞ்சம்.

,..