Thursday, June 17, 2010

. . .

இலையுதிர்கால போதிமரம்.
அடர்த்தியற்ற கிளைகளுக்கு கீழ்
கண்மூடி அமர்ந்திருந்தார்
புத்தர்.
உதிர்ந்து வீழும்
இலைகளில் ஒன்றாய்
கீழ்விழக் காத்திருந்தது
ஞானம்.
'இங்க உக்காந்திட்டு
என்ன மயிரைப் புடுங்கறான் இவன்?'
என்று
யோசிக்கத்துவங்கியது
மரத்தின் மேல்
அமர்ந்திருந்த காகம்.
விழுதல் ஞானமெனில்
பறத்தல்
வி
டு
லை.

Wednesday, June 16, 2010

இன்னும் சில ...

இந்த முறை நீ வந்தமர்ந்த கிளையில்தான்
பூக்கத்துவங்கியது
வசந்தத்தின் முதல் பூ
இன்னும் காலமிருக்கிறது
இலையுதிர்காலத்திற்கு

,..


நீ மறந்ததாய் சொன்ன வழியின்
முடிவில் இருக்கிறது
என் வீடு

,..

எந்தத் திருப்பத்திலும்
உன்னை எதிர்பார்க்கலாம் என்றாய் ...
திரும்பிப்பார்த்தபடி நடக்கிறேன்...


,..

நீ உட்கொள்ள உட்கொள்ள
உயிர்த்தெழுகின்றன என் வார்த்தைகள் எல்லாம்.
அடுத்த மழை பெய்வதற்கு முன்
நட்டு வைக்கிறேன்
உன் அத்தனை பார்வைகளையும்.


,..

எதைக்கேட்டு எதைப்பெறுவதென
நமக்குள் குழப்பம் வர,
இரு விரல் நீட்டி ஒன்றைத்தொடு என்கிறாய்...
ஒளிரும் உனது இரு விரல்களில்
ஒளிந்திருக்கும் இரவை
எனக்குத் தந்து விட்டு
நீ பகல் கொள்ளைக்காரியாய் மாறிவிடு...


,..

Friday, June 11, 2010

. . .

அதிகாலை சூரியனிலிருந்து
புறப்பட்டுப்போகிறதோர்
குப்பை வண்டி.
காலத்தை இப்படியும்
இழுத்துச்செல்லலாம் போல
,..

. . .

ஒற்றை மரத்தை
ஒரு முறைதான் சுற்றினேன்
திருப்பி வைக்கப்பட்டிருக்கின்றது
மொத்த பூமியும்
,..

...

இளந்தளிர்கள் சிலிர்த்து நிற்கும்
செடிகளிடம்
இதற்கு மேலும்
என்ன கேட்கின்றது
அதிகாலையில்
பெய்யுமிந்த மழை
...

. . .

இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு
இரண்டிற்குமிடையில்
எங்கோ தங்கி நிற்கின்றன
தெளிந்த பூமியும்
அது நனைந்த வாசமும்
,..